நட்சத்திரம் பொறுக்கிய தினங்கள்
நட்சத்திரம் பொறுக்கிய தினங்கள்
அந்த நீண்ட இரவுகளில்
காட்டின் அந்தரங்கத்தில்
நீயும் நானும் ஓடி ஓடி
உதிர்ந்துவிழும் நட்சத்திரங்களைப்
பொறுக்கிக்கொண்டிருந்தோம்.
இன்னும் விடிவதற்கு
கொஞ்ச நேரம் தான்.
வானத்தின் மரம்
தன்னை குலுக்கிக்கொண்டு
சோம்பல்முறித்து எழும்போது
நிச்சயம் நிறைய
விண்மீன்கள் உதிரும்.
நீ உன்னிடம ஏற்கனவே்
நிறைய நட்சத்திரங்களைச்
சேர்த்து வைத்திருந்தாய்..
‘உதிர்ந்தது நட்சத்திரங்களா?
அல்லது உன் கண்மணிகளா?’
என்று நான் குழம்பி நிற்கையில்
சற்றுமுன் உதிர்ந்த அந்த நட்சத்திரத்தையும்
நீ உன் மடியில் சேர்த்துக்கொள்வாய் ..
ஒரு பெண்ணின் வாழ்க்கை
பாதைகளைப்பற்றி கவலைப்படாத
நதியின் வாழ்க்கை போலும்!
கரையில் நின்றுகொண்டு
நதியின் சுழியை ரசித்து
காலத்தைக் கரைப்பதோ
ஆணின் வாழ்க்கை!
இதோ உன் பைகளெல்லாம்்
நட்சத்திரங்களால் நிறைத்துவிட்டாய்.
இப்பொழுது உன் பாவாடையிலும்
பூக்கள் சேர்க்க ஆரம்பித்துவிட்டாய்.
நிறையாத பைகளோடு
வீடு திரும்புவதே எனக்கு
வழக்கமாகிவிட்டது.
அம்மாவிடம் உதை நிச்சயம்.
ஒவ்வொரு முறையும்
நினைத்துக்கொள்வேன் -
நிச்சயம் நாளையாவது
நீயில்லாத வேறுதிசையில்
பயணிக்கவேண்டும்.
ஆனால் விடிந்ததும்
தினம்தினம் உன்சுவடுகளைத்
தொடர்வதே வழக்கமாகிவிட்டது..
