காதலி நீயொரு போதிமரம்
(இந்த கவிதை தலைவனும் தலைவியும் உரையாடுவது போல அமையப்பெற்றது.)
தலைவன
குயில் குரலோடு பிறந்தது!
கடல் அலையோடு பிறந்தது
முகிழ் பூவிதழோடு பிறந்தது
நான் தமிழோடு பிறந்தேன்.
நீ அமுதோடு பிறந்தாயோ? -இல்லை
அழகோடு பிறந்தாயோ?்
தலைவி
மின்மினி வெளிச்சத்தோடு பிறக்கவில்லை.
மின்மினி வெளிச்சமாகவே பிறந்தது.
வானம்பாடி கானத்தோடு பிறக்கவில்லை
வானம்பாடி கானமாகவே பிறந்தது.
நான் அமுதோடு பிறக்கவில்லை
அமுதமாகவே பிறந்தேன்.
நான் அழகோடு பிறக்கவில்லை
அழகின் உருவமாய்ப் பிறந்தேன்.
வான்பூக்கள் தடாகத்தில்
நிலவு ஒரு குவளைப்பூ
பூமகளின் தோட்டத்தில்
நானோ ஒரு குறிஞ்சிப்பூ
நீ தென்றல் போல் சேதி
சொல்ல வந்தாயோ? - இல்லை
வண்டைப் போல் இதழுரச வந்தாயோ?
தலைவன்
குயிலுக்கு கவிசொல்ல வந்தேன்.
நதிக்கொரு நடைசொல்ல வந்தேன்
காற்றுக்கு வழிசொல்ல வந்தேன்
அலைகளுக்கு கரைகாட்ட வந்தேன்.
உனக்கொரு தமிழ்சொல்ல வந்தேன்.
உன்சுடரில் வார்த்தையின்றி நின்றேன்.
தலைவி
விண்மீனின் வெளிச்சத்தில்
நிலவுக்கேன் தடுமாற்றம்
ஒருசொட்டு நீர்த்துளியால்
கடலுக்கேன் முகமாற்றம்
நானோர் மழைத்துளி
புல்படிந்த பனித்துளி
நீயோர் பெருங்கொண்டல்
பூச்சொறியும் நந்தவனம்.
தலைவன்
துளிமிகையால் அணைவுடையும்
துளிப்பொறியால் காடழியும்
நீயோர் தீப்பொறிதான!்
நுனிப்புல்லின் நீர்த்துளி தான்!
துளிப்பொறியின் பசியினிலே
தூரெறிந்த காடானேன்
மிகைத்துளியால் திசையிழந்த
செடிகொடியின் சருகே நான்!
நீ!
பூப்பூக்கும் நேரத்தில்
புன்னகைக்கக் கற்றாயோ?
தேன்சுரக்கும் நேரத்தில்
இதழுடுத்திக்கொண்டாயோ?
நதிநடக்கும் வீதியிலே
நடைபயின்று கொண்டாயோ?
ரவிமுளைக்கும் நேரத்தில்
கண்ணில் ஒளி பெற்றாயோ?
சித்திரையும் முக்கனியும்
சிங்காரச்செந்தமிழும்
முற்றத்து நிலவொளியும்
முகிழ்தூவும் நீர்த்துளியும்
சற்றே நடைபயிலும்
தெருவோரத்தென்றலதும்
தொட்டில் தாலாட்டும்
சுவையதனில் உன்னினமே
பூவுதிரும் ஓசையிலும்
துயில்கலைந்து எழுவாயே
புல்னுனியின் பனித்துளியின்
குளிர்தாங்க மாட்டாயே!
தேய்ந்துவரும் நிலவிற்காய்
தினம்கண்ணீர் விடுவாயே
காய்ந்தமலர் பார்த்துவிட்டால்
கணநேரம் மறிப்பாயே
நதிவிழுந்த சருகாக
உன்சுவடைத் தொடர்வேனெ!
விரல்களைந்த நகமாக
சுயம்மறந்து கிடப்பேனே!
(தலைவனின் சுயத்தையறிய தலைவி கேள்விக்கணைகளைத் தொடுக்கிறாள். தலைவன் பதிலுரைக்கிறான்.)
தலைவி
நீ காதலியைப் பார்த்த கண்களோடு
எதைப்பார்க்க விரும்புகின்றாய்?
நிலவையா, விண்மோனையா?
தலைவன்
நிலவிற்கோ களங்கமுண்டு!
வெண்மீனிற்கோ வெளிச்சமில்லை!
தலைவி
நீ காதலியோடு பேசிய வாயோடு
எதை உச்சரிக்க விரும்புகின்றாய்?
தமிழையா, மௌனத்தையா?
தலைவன்
காதலி பேசாத தமிழில் அமுதில்லை
மௌனத்தில் தமிழுமில்லை
தலைவி
நீ காதலியைத்தொட்ட விரல்களோடு
எதைத் தடவிப்பார்க்க விரும்புகின்றாய்?
பூக்களையா, பனித்துளியையா?
தலைவன்
பூக்களிலே குளிர்ச்சியில்லை!
பனித்துளியில் மென்மையில்லை!
தலைவி
நீ காதலியோடு வாழ்ந்தபின்
எங்கே வாழ்ந்துபார்க்க விரும்புகின்றாய்?
நந்தவனத்தின் மடியிலா, சொர்க்கத்திலா?
தலைவன்
பூமடியில் அன்பில்லை!
சொர்க்கத்தில் சுதந்திரமில்லை!
(தலைவனின் சுயமறிந்த தலைவி சந்தோஷமடைகிறாள். இப்பொழுது தலைவன் பேசுகிறான்.)
காதலி நீயொரு போதிமரம் - உன்
கண்ணொளி பார்த்திட ஞானம் வரும்.
ஆயிரம் ஆயிரம் கோடி சுகம்
உன் ஒரு தீண்டல் தேடித்தரும்
காத்லொரு சுகமான மரணம் - தீக்குளிக்கும்
விட்டிலுக்கே காதல்சுகம் தெரியும்
காதலொரு இனிதான ஜனனம் -இதழ்விரிக்கும்
மொட்டுக்கே காதல்மனம் புரியும்
காதலொரு புதிரான பயணம்
சுவடிழந்த வண்டுக்கே புரியும்
காதலது உணர்வுகளின் நளினம்
கவிஞனுக்கே காதல் வார்த்தை புரியும்!
்