நட்சத்திரம் பொறுக்கிய தினங்கள்

 

நட்சத்திரம் பொறுக்கிய தினங்கள

அந்த நீண்ட இரவுகளில்
காட்டின் அந்தரங்கத்தில்
நீயும் நானும் ஓடி ஓடி
உதிர்ந்துவிழும் நட்சத்திரங்களைப்
பொறுக்கிக்கொண்டிருந்தோம்.

இன்னும் விடிவதற்கு
கொஞ்ச நேரம் தான்.

வானத்தின் மரம்
தன்னை குலுக்கிக்கொண்டு
சோம்பல்முறித்து எழும்போது
நிச்சயம் நிறைய
விண்மீன்கள் உதிரும்.

நீ உன்னிடம ஏற்கனவே்
நிறைய நட்சத்திரங்களைச்
சேர்த்து வைத்திருந்தாய்..

உதிர்ந்தது நட்சத்திரங்களா?
அல்லது உன் கண்மணிகளா?’
என்று நான் குழம்பி நிற்கையில்
சற்றுமுன் உதிர்ந்த அந்த நட்சத்திரத்தையும்
நீ உன் மடியில் சேர்த்துக்கொள்வாய் ..

ஒரு பெண்ணின் வாழ்க்கை
பாதைகளைப்பற்றி கவலைப்படாத
நதியின் வாழ்க்கை போலும்!

கரையில் நின்றுகொண்டு
நதியின் சுழியை ரசித்து
காலத்தைக் கரைப்பதோ
ஆணின் வாழ்க்கை!

இதோ உன் பைகளெல்லாம்்
நட்சத்திரங்களால் நிறைத்துவிட்டாய்.
இப்பொழுது உன் பாவாடையிலும்
பூக்கள் சேர்க்க ஆரம்பித்துவிட்டாய்.

நிறையாத பைகளோடு
வீடு திரும்புவதே எனக்கு
வழக்கமாகிவிட்டது.
அம்மாவிடம் உதை நிச்சயம்.

ஒவ்வொரு முறையும்
நினைத்துக்கொள்வேன் -
நிச்சயம் நாளையாவது
நீயில்லாத வேறுதிசையில்
பயணிக்கவேண்டும்.

ஆனால் விடிந்ததும்
தினம்தினம் உன்சுவடுகளைத்
தொடர்வதே வழக்கமாகிவிட்டது..

என் நேற்றைய கவிதைகள்்

காதலி நீயொரு போதிமர

(இந்த கவிதை தலைவனும் தலைவியும் உரையாடுவது போல அமையப்பெற்றது.)

 தலைவன
           
குயில் குரலோடு பிறந்தது!
            கடல் அலையோடு பிறந்தது
            முகிழ் பூவிதழோடு பிறந்தது
            நான் தமிழோடு பிறந்தேன்.
            நீ அமுதோடு பிறந்தாயோ? -இல்லை
           அழகோடு பிறந்தாயோ?

 தலைவி
           
மின்மினி வெளிச்சத்தோடு பிறக்கவில்லை.
            மின்மினி வெளிச்சமாகவே பிறந்தது.
            வானம்பாடி கானத்தோடு பிறக்கவில்லை
            வானம்பாடி கானமாகவே பிறந்தது.
            நான் அமுதோடு பிறக்கவில்லை
           அமுதமாகவே பிறந்தேன்.
           நான் அழகோடு பிறக்கவில்லை
          அழகின் உருவமாய்ப் பிறந்தேன்.

          வான்பூக்கள் தடாகத்தில்
          நிலவு ஒரு குவளைப்பூ
          பூமகளின் தோட்டத்தில்
          நானோ ஒரு குறிஞ்சிப்பூ

         நீ தென்றல் போல் சேதி
         சொல்ல வந்தாயோ? - இல்லை
         வண்டைப் போல் இதழுரச வந்தாயோ?

 தலைவன்
         குயிலுக்கு கவிசொல்ல வந்தேன்.
         நதிக்கொரு நடைசொல்ல வந்தேன்
         காற்றுக்கு வழிசொல்ல வந்தேன்
        அலைகளுக்கு கரைகாட்ட வந்தேன்.
        உனக்கொரு தமிழ்சொல்ல வந்தேன்.
         உன்சுடரில் வார்த்தையின்றி நின்றே
ன்.

 தலைவி
         விண்மீனின் வெளிச்சத்தில்
          நிலவுக்கேன் தடுமாற்றம்
          ஒருசொட்டு நீர்த்துளியால்
          கடலுக்கேன் முகமாற்றம்
          நானோர் மழைத்துளி
         புல்படிந்த பனித்துளி
         நீயோர் பெருங்கொண்டல்
         பூச்சொறியும் நந்தவனம்.

தலைவன்
        துளிமிகையால் அணைவுடையும்
        துளிப்பொறியால் காடழியும்
        நீயோர் தீப்பொறிதான!்
       நுனிப்புல்லின் நீர்த்துளி தான்!
       துளிப்பொறியின் பசியினிலே
       தூரெறிந்த காடானேன்
       மிகைத்துளியால் திசையிழந்த
       செடிகொடியின் சருகே நான்!
       நீ!
       பூப்பூக்கும் நேரத்தில்
       புன்னகைக்கக் கற்றாயோ?
       தேன்சுரக்கும் நேரத்தில்
       இதழுடுத்திக்கொண்டாயோ?
        நதிநடக்கும் வீதியிலே
        நடைபயின்று கொண்டாயோ?
        ரவிமுளைக்கும் நேரத்தில்
        கண்ணில் ஒளி பெற்றாயோ?

        சித்திரையும் முக்கனியும்
        சிங்காரச்செந்தமிழும்
        முற்றத்து நிலவொளியும்
        முகிழ்தூவும் நீர்த்துளியும்
        சற்றே நடைபயிலும்
        தெருவோரத்தென்றலதும்
        தொட்டில் தாலாட்டும்
        சுவையதனில் உன்னினமே

        பூவுதிரும் ஓசையிலும்
       துயில்கலைந்து எழுவாயே
       புல்னுனியின் பனித்துளியின்
       குளிர்தாங்க மாட்டாயே!
       தேய்ந்துவரும் நிலவிற்காய்
       தினம்கண்ணீர் விடுவாயே
       காய்ந்தமலர் பார்த்துவிட்டால்
       கணநேரம் மறிப்பாயே

        நதிவிழுந்த சருகாக
       உன்சுவடைத் தொடர்வேனெ!
       விரல்களைந்த நகமாக
       சுயம்மறந்து கிடப்பேனே!

 (தலைவனின் சுயத்தையறிய தலைவி கேள்விக்கணைகளைத் தொடுக்கிறாள். தலைவன் பதிலுரைக்கிறான்.)
தலைவி
       நீ காதலியைப் பார்த்த கண்களோடு
       எதைப்பார்க்க விரும்புகின்றாய்?
       நிலவையா, விண்மோனையா?

தலைவன்
       நிலவிற்கோ களங்கமுண்டு!
       வெண்மீனிற்கோ வெளிச்சமில்லை!

தலைவி
        நீ காதலியோடு பேசிய வாயோடு
        எதை உச்சரிக்க விரும்புகின்றாய்?
         தமிழையா, மௌனத்தையா?

தலைவன்
         காதலி பேசாத தமிழில் அமுதில்லை
         மௌனத்தில் தமிழுமில்லை

 தலைவி
          நீ காதலியைத்தொட்ட விரல்களோடு
          எதைத் தடவிப்பார்க்க விரும்புகின்றாய்?
          பூக்களையா, பனித்துளியையா?

தலைவன்
          பூக்களிலே குளிர்ச்சியில்லை!
          பனித்துளியில் மென்மையில்லை!

தலைவி
          நீ காதலியோடு வாழ்ந்தபின்
          எங்கே வாழ்ந்துபார்க்க விரும்புகின்றாய்?
          நந்தவனத்தின் மடியிலா, சொர்க்கத்திலா?

தலைவன்
          பூமடியில் அன்பில்லை!
          சொர்க்கத்தில் சுதந்திரமில்லை!

(தலைவனின் சுயமறிந்த தலைவி சந்தோஷமடைகிறாள். இப்பொழுது தலைவன் பேசுகிறான்.)

     காதலி நீயொரு போதிமரம் - உன்
     கண்ணொளி பார்த்திட ஞானம் வரும்.
     ஆயிரம் ஆயிரம் கோடி சுகம்
      உன் ஒரு தீண்டல் தேடித்தரும்

      காத்லொரு சுகமான மரணம் - தீக்குளிக்கும்
      விட்டிலுக்கே காதல்சுகம் தெரியும்
       காதலொரு இனிதான ஜனனம் -இதழ்விரிக்கும்
       மொட்டுக்கே காதல்மனம் புரியும்
       காதலொரு புதிரான பயணம்
        சுவடிழந்த வண்டுக்கே புரியும்
        காதலது உணர்வுகளின் நளினம்
        கவிஞனுக்கே காதல் வார்த்தை புரியும்!

என் நேற்றைய கவிதைகள்

தமிழ் வணக்கம்

தமிழ்ப் பெண்ணே தலைவணக்கம்
         உன் நினைவில் உயிர் துடிக்கும்.

 உன் பேரை உச்சரித்தால்
          உதட்டோரம் பூவாசம்!
நெஞ்சோடு இருப்பதெல்லாம்
          நீ மட்டும் நீமட்டும்.
உனக்கென்று வயதேது
         அதுஎன்றும் பதினாறு
உயிரிங்கு வாழாது
         உன்மூச்சு இல்லாது

(தமிழ்ப் )

நிலவைக் கரைத்துனக்கு
      நிறம் தந்ததாரோ? - என்
மனதைக் கரைப்பதற்கு
      திறம் தந்ததாரோ?
பூவெல்லாம் உன்வாசம்
       உன்வார்த்தை குயில் பேசும்
ஊரெல்லாம் உந்தோற்றம்
       உனை நினைத்தால் தேன்சொட்டும்

  (தமிழ்ப்)

நெருப்பிற்கேது திறம்
        என்னைச் சுடுவதற்கு?
வருத்தத்திற்கேது மனம்
        என்வாசல் வருவதற்கு?
கன்னிஉன் நினைப்பில்
        சுடுகாடு சொர்க்கமாகும்
மண்ணின் சொர்க்கமது
        உன்னொரு ஸ்பரிசமாகும்

(தமிழ்ப்)

உனைப்பேசும் நாவிற்குத்
        தேன்கூடு சொந்தம்.
உனைத்தொட்ட உதட்டிற்கு
        பூக்கூடை சொந்தம்.
உனைப்பார்த்த கண்ணிற்கு
        ஒளியென்றும் சொந்தம்
சொர்க்கம் சென்றுவர
        சிறகுண்டு என்றும்.

(தமிழ்ப் )

நீநடக்கும் பாதையெல்லாம்
       தென்றலது தெருக்கூட்டும்;
நீநடந்த வாசலெல்லாம்
        நிலாப்பூக்கள் பூத்திருக்கும்
பூப்பெண்நீ நடந்துவிட்டால்
       புதைகுழிக்கும் உயிர்பிறக்கும்
பாலையின் வாசலிலும்
       கங்கைநீர்த் துளிபிறக்கும்.

(தமிழ்ப்)

  உனைப்பாட முடியாமல்
       பாவேந்தன் களைத்துவிட்டான்
உன் அடிகாண முடியாமல்
       பாரதியும் மலைத்துவிட்டான்
ஒருபிறவி போதாத
       கவிமணியும் இனிபிறப்பான்.
மறுபிறவி போதாமல்
       மலைத்தேதான் உயிர்துறப்பான்.

(தமிழ்ப் )

நீலக்கட லெல்லை
     நான்நடந்தால் வந்துவிடும்
நினதெல்லை காண்பதெனில்
     பலஜென்மம் தீர்ந்துவிடும்.
கேட்கும் பொழுதெல்லாம்
     நீயெனக்கு கவிதந்தாய்
நீமட்டும் கேட்டுவிட்டால்
    உயிர்கூட நான் தருவேன்

(தமிழ்ப் )