பூட்டியவீட்டிற்குள் நீ சந்தோஷமாயிரு

சுந்தர காண்டம்

எனது உலகமும்
குழந்தைகளின் உலகமும்
ஒன்றாயிருந்தது.

ஒவ்வொரு இரவும்
நான் மேகங்களின் மடியில்
நட்சத்திரங்களின் தாலாட்டில்
உறங்கிக்கொண்டிருந்தேன்.

ஒவ்வொரு விடியலையும்
தென்றல் தான்
கதவைத்தட்டி எனக்கு
அறிமுகம் செய்துவைத்தது

எனது அறைகளின்
மேற்சுவற்றில்
மின்விசிறிகள் இல்லை
- ஏதோ ஒரு வண்ணத்துப்பூச்சி
எப்பொழுதாவது சிறகுகளை
காயப்படுத்திக்கொள்ளலாம்.

எனது அறையில்
கூண்டில்லாத தீபங்களுக்கு
அனுமதியில்லை
- அறியாத விட்டில் பூச்சிகள்
தீக்கனியைப் பறிக்க நினைத்து
உயிர்மலரை உதிர்த்துவிடலாம்.

எனது சன்னல்கள்
எப்பொழுதும் திறந்தேயிருந்தன
-இரவில் வழி தவறியபறவைக்கு
கூடு தேவைப்படலாம்.

எனது அறையில்
இரவில் அதிக நேரம்
விளக்குகள் எறிவதில்லை
-பக்கத்து மர பறவைகள்
கூடல் கொள்ள வெட்கப்படலாம்.

என் பாதைகளுக்கு
மின்மினிகள் வெளிச்சம் பிடித்தன.

என் இரவுக் கூரையினை
நட்சத்திரங்கள் அலங்கரித்தன.

நான் செய்யவேண்டியவைகளை
ஏதோ ஒரு பறவையின் பாடல்
ஞாபகப்படுத்தியது.

மரங்களின் கிளைகளில்
நானும் ஒரு பறவையைப்போல
வாழ்ந்துகொண்டிருந்தேன்.
-எனது ஒரே ஊனம்
சிறகுகள் இல்லாதது தான்.

யுத்த காண்டம்

அன்றைய விடியலும்
நட்சத்திர மொட்டுக்களை
அவிழ்த்துக்கொண்டு
வெளிச்ச உடையக்கட்டிக்கொண்டு
அழகாய்த்தான் விடிந்தது.

ஆனால், சிறிது நேரத்தில்
இரத்தம் தோய்ந்த சிறகுகளுடன்
சன்னல் வழியே வீட்டிற்குள்
உதிர்ந்த்து ஒரு பறவை.

"மனிதர்கள் கொடியவர்கள்.
விளையாட்டிற்காய் வேட்டையாடுபவர்கள்.
என் தாய், என் தந்தை, என் சகோதரர்கள்
இழந்த உயிர்களுக்கும்
நான் இழந்த இரத்தத்திற்கும்
எனக்கு நீதி வேண்டும்.
ஆனால், நீயும் மனிதன் தானே!"

நான் அவசரமாய்ச் சொன்னேன்.
"இல்லை. இல்லை.
நானும் உன்னைப்போலத்தான்"
என்னிடம் திரும்பிக்காட்ட
சிறகுகள் இல்லை.
என் ஊனம் என்னைப்
பழிவாங்கியது.

அந்த பறவை
என்னை நம்பாமலேயே
இறந்து போனது.

அந்த இறந்த பறவையின்
திறந்த வாய்
உலகின் மீதான
நம்பிக்க்கையின்மையக் காட்டியது.

நான் அதை கையில்
எடுத்துவைத்துக்கொண்டு புலம்பினேன்.

இதுவரையில் என்வானத்தில்
நிலாவைப் பலாத்காரம் செய்ய
மேகங்கள் துரத்துவதில்லை.

என் உலகத்தில்
மான்களை சிங்கங்கள்
மரியாதையோடு நடத்துகின்றன.
பசிவந்தால் நதிக்கரை
புற்களைச் சாப்பிடுகின்றன.

மலர்கள் முகந்து பார்க்கப்படுவதற்குமுன்
அனுமதி கேட்கப்படுகின்றன.

என் நதிகளுக்கு கரைகள் இல்லை.
-அவைகள் சிற்றோடைகள் போல
கண்ட இடத்தில் கால்பதித்து
சுதந்திரமாய் நடக்கின்றன.

ஆனால் இன்று,
முதன்முதலாய் என் உலகத்தில்
இரத்தமாய் ஒரு விடியல்..

இதோ இப்பொழுதே
பிடுங்கி எறிகிறேன்
வன்முறை முள்மரத்தின்
முதல் துளி
ர்ச்செடியை..

என் அறையில்
ஆயுதங்களைத் தேடினேன்.
பூக்களைத்தவிர வேறொன்றுமில்லை ..
பூக்களிலும் முள்ளுள்ள பூக்கள்
என் கைவசமில்லை.

கடைசியாய் என்கைக்குக் கிடைத்தது
என் முனைதோய்ந்த பேனா.


பூக்களத்தில்
போதையில் கிடந்த என் பேனா
முதன்முதலாய் போர்களத்தில்.

நான் வீராவேசத்தோடு
வெளியில் பாய்ந்தேன்.
வெளியில் வந்ததும் அதிர்ந்து போனேன்.

எதிரே என் கண்களைக்
குறிபார்த்தபடி சில துப்பாக்கிகள்.

என் இதயத்தைக் குறிபார்த்தபடி
சில ஏகே47கள்.

என் மொத்த தலையைக் குறி
பார்த்தபடி பெரிதாய்ப் பீரங்கிகள்.

கடைசியாய் என் கால்களுக்கிடையே
கண்ணிவெடிகள்.

எனக்கு தெளிவாய்த் தெறிந்தது -
நான் தோற்றுப்போவேனென்று.
அது மட்டுமல்ல -
இறந்தும் போவேனென்று.

அதற்கு முன் உனக்கு சில அறிவுரைகள்.

மயான காண்டம்

ஓ நண்பனே!
உன் பூட்டிய வீட்டிற்குள்
நீ சந்தோஷமாயிரு.

உன் வாசல் கதவுகளைப்
பொதுவாய்ச் சாத்திவை.
ஜெலாட்டின் குச்சிகளின்
கருகிய வாசனை
உன் நுரையீரலுக்கு நல்லதல்ல.

உன் சன்னல் கதவுகளை
எப்பொழுதும் மூடிவை.
பீரங்கிகளின் வெடிச்சத்தம்
உன் செவிப்பறையைக் கிழித்துவிடலாம்.

செய்தித்தாள்கள் தப்பித்தவறியும்
உன் தபால் பெட்டியில்
விழாமல் பார்த்துக்கொள்.
"வயதானவர்களின் கொலைகள்-
பிச்சையெடுக்கும் குழந்தைகள்-"
இதுபோன்ற செய்திகள்
உன் இதயத்திற்கு நல்லதல்ல.

முடிந்தால், ‘டெபோனர்’ ஆயுள் சந்தா
வாங்கிவைத்துக்கொள்.
நடுப்பக்க இறகு உரித்த பறவைகள்
கண்களுக்கு குளிர்ச்சி!

எப்பொழுதாவது
உன் கூரையிடுக்கு
வழியே சுடப்பட்டு விழும்
பறவைகளுக்காக நீ ஒன்றும்
வருந்த வேண்டியதில்லை.

துப்பாக்கிக்குண்டுகளைவிட
வேகமாய்ப் பறக்க முடியாத
பறவைகள் உயிர் வாழ்வதன்
அவசியமென்ன?

‘அட! உன் சமையலுக்கு
இன்று சரியான வரவு!’
உன் பூட்டிய வீட்டிற்குள்
சமையல் செய்து சந்தோஷமாயிரு.

(ந. அருள் முருகன்)

(பின்குறிப்பு: இந்த கவிதை புரியவில்லையென்றால் எனக்கு கடிதம் எழுது. நான் கவிஞன் என்று சொல்லி சந்தோஷப்பட்டுக்கொள்கிறேன்.)

Comments »

The URI to TrackBack this entry is: http://arulmurugan.blogsome.com/2006/04/07/%e0%ae%aa%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%9a/trackback/

No comments yet.

RSS feed for comments on this post.

Leave a comment

Line and paragraph breaks automatic, e-mail address never displayed, HTML allowed: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <code> <em> <i> <strike> <strong>